Pages

Tuesday 8 October 2013

கொடி காத்த குமரன் பிறந்த நாள் இன்று - அக்டோபர் -4





கொடி காத்த குமரன் என போற்றப்படும் விடுதலைப் போராட்ட வீரர், திருப்பூர் குமரனுக்கு இன்று பிறந்த நாள். அவரது சாதனைச் சரித்திரத்தின் சில பக்கங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து-கருப்பாயி தம்பத்யினருக்கு முதல் மகனாகப் பிறந்தவர் குமரன். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்ட அவர்,கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தார்.
1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயை மணம் முடித்தார்.
கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈங்கூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் ஊழியராக பணியில் சேர்ந்தார். இந்திய திருநாடு வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த காலக்கட்டத்தில், காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார்.1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது ஆங்கிலேய காவலர்களால் தாக்கப்பட்டு, தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார். அவரை இந்நாளில் நினைவு கூறுவோம்……

No comments:

Post a Comment