Pages

Wednesday 12 March 2014

பெனிசிலின் தந்தை அலெக்ஸாண்டர் பிளெமிங்

 
பென்சிலின் என்ற நோய் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்து மருத்துவ உலகினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் அலெக்சாண்டர் பிளெமிங்.
உலகில் பல்வேறு மருத்துவ கண்டுபிடிப்புகளும், முன்னேற்றங்களும் வந்தாலும் அவற்றில் பென்சிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
பென்சிலின்
இன்று வரை உலகின் சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் மருந்தாக இருப்பது பென்சிலின்.
பென்சிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம்.
லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பென்சிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அலெக்சாண்டர் பிளெமிங்

ப்ளெமிங் 1881ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார்.
பின்னாளில் அவர் பென்சிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது.
பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.

நோய்க்கிருமிகளுடன் போராடிய ப்ளெமிங்

படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங்.
ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.
நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள்.

போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர்.
இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார்.
குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.
பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்.
இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார்.

காளானிலிருந்து பெனிசிலின்

1928ம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார்.
கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார்.
காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.

பாராட்டுக்களும் விருதுகளும்

1945ம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944ம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1999ம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.

2000ம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன.

2002ம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.

அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது.

இறப்பு
தன் கண்டுபிடிப்பால் பல உயிர்களை வாழவைத்த அலெக்சாண்டர் பிளெமிங் தனது 75 வயதில் காலமானார், இவர் கண்டுபிடித்த பென்சிலின் இன்று பல அறிய மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக உள்ளது, அவர் கண்டுபிடித்த பென்சிலின் மருந்து பல கோடி உயிர்களை இன்றும் காப்பாற்றிக்கொண்டு தான் இருக்கிறது

No comments:

Post a Comment