Pages

Friday 13 September 2013

மதுரையை ஆண்ட பாண்டியர்கள்

மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்? மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம்.

பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. லெமூரியா கண்டத்தின் நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் தங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். இரண்டு மீன்களின் இருபுறமும் உள்ள கண்கள் தெரிய வேண்டுமென்பதற்காக செங்குத்தாக நிற்பது போல் அமைத்தனர். எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர்.

கொற்கையை ஆண்ட சடவர்மன் வீரபாண்டியன், இலங்கையில் போர்தொடுத்து வென்று, திரிகோணமலை பாறையில் மீன்கொடியை பொறித்தான். பிற்காலத்தில் டச்சுக்காரர்கள், அந்த பாறையை பெயர்த்தெடுத்து, தூய பெரடரிக் கோட்டை சுவர் மீது வைத்தனர். பாண்டிய மன்னர்கள் வாணிப செலாவணிக்காக காசுகளை அச்சடித்தனர். கொற்கை துறைமுகம் கடல்கோளால் சீரழிய, பழைய காயலுக்கு துறைமுகம் இடம்பெயர்ந்தது. இங்கும் கடல்கோளால் 4 கி.மீ., தூரத்தை கடல்கொண்டது. இப்படி அடிக்கடி ஏற்பட்ட கடல் கோள்களில் இருந்து தப்பிக்க, பாண்டியர் தலைநகரை மதுரைக்கு மாற்றினர். கொற்கையை ஆண்ட கடைசி மன்னர் முடத்திருமாறன். மதுரையை பாண்டியர்கள் ஆண்டாலும், கொற்கையை அவர்களது வாரிசுகள் ஆண்டனர். கொற்கை, பழைய காயலில் இருந்து பாண்டியர் தலைநகரம் மதுரைக்கு இடமாறியதை பிளினி போன்ற பேராசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். அழகர் கோவிலில் உள்ள பிராமி கல்வெட்டில் மதுரையை "மதிரய்' என சமணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கி.பி. 1310 முதல் பாண்டியர்களுக்கு சோதனை காலமானது. குலசேகர பாண்டியன் வாரிசுகள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இடையே வாரிசுரிமை போர் மூண்டது. இதை பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையில் படையெடுத்ததை தொடர்ந்து, கி.பி.1330 -78ல் முகமதியர் ஆட்சி நடந்தது. பின், விஜயநகர அரசர் குமார கம்பணன் மதுரையை வென்று ஆட்சியை நிறுவினார். இதைதொடர்ந்து நாயக்கர் ஆட்சி நடந்தது. 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல்லை பகுதிக்கு சென்ற பாண்டிய மன்னர்கள், தென்பாண்டி நாட்டை குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர். கி.பி.17ம் நூற்றாண்டு வரை இவர்களது சந்ததியினர் கொற்கை, தென்காசி, கரிவலம் வந்தநல்லூரில் ஆட்சி செய்தனர். பாண்டியர் மன்னர்களில் கி.பி.1422 - 63 வரை ஆட்சி செய்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் குறிப்பிடத்தக்கவர். இவர் சேர மன்னனை வென்றார். தென்காசியில் கோயில் எழுப்பினார். 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இருந்தாலும், மதுரை என்றாலே "பாண்டிய நாடு' என்ற பெருமையை தந்தவர்கள் பாண்டிய மன்னர்கள்தான்.

No comments:

Post a Comment